சென்னை, திருவான்மியூரில் உள்ள நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் தங்கக் கட்டிகள், பதக்கம் திருட்டுபோனது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரைப்பட நடிகர் பார்த்திபன் வீடும், அலுவலகமும் திருவான்மியூர் காமராஜர் நகர் 11-ஆவது கிழக்குத் தெருவில் உள்ளது. அங்குள்ள வீட்டை பார்த்திபன் வாடகைக்கு விட்டுள்ளார். அலுவலகத்தை மட்டும் பார்த்திபன் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை பார்த்திபனின் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பெண் வந்தபோது, அலுவலகக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பார்த்திபன் மேலாளர் கிரணுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் அலுவலகத்திற்கு வந்து திருட்டு போன பொருள்களை பட்டியலிட்டார்.
இதுகுறித்து அவர், திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அலுவலகத்தில் இருந்த தங்கக் கட்டிகள், தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்கள் திருடு போயிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக திருவான்மியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.