சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், மொரீஷஸ் நாட்டுக்குச் தப்பிச் சென்றவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் உள்பட 5 பேர் அண்ணாநகர் பொன்னி காலனியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்தனர். அதன்படி, பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் கார்த்திக்கிடம், புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். புதிய கட்டடம் கட்டுவதற்கு கார்த்திக் ரூ.1 கோடி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கார்த்திக், அவர்களை ஏமாற்றிவிட்டு ரூ.1 கோடியுடன் திடீரென மொரீஷஸ் நாட்டுக்குச் தப்பிச் சென்றார். மேலும் அந்தக் குடியிருப்பு நிலத்தையும் வேறு நபர்களுக்கு கார்த்திக் விற்பனை செய்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், சென்னை பெருநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார்த்திக்கை தேடி வந்தனர்.
இந்நிலையில் கார்த்திக் இரு நாள்களுக்கு முன்பு மொரீஷஸ் நாட்டில் இருந்து பெங்களூருக்கு வருவதாக போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு முகாமிட்டிருந்த போலீஸார், பெங்களூரு விமான நிலையத்தில் கார்த்திக்கை புதன்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.