சென்னையில் தொழிலதிபரிடம் போலி ஆவணம் மூலம் அரசு நிலத்தை ரூ.1.58 கோடிக்கு விற்றதாக திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே உள்ள நன்மங்கலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சி.பிரபு (35). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவரிடம், கடந்த 2013 -ஆம் ஆண்டு கோவிலம்பாக்கம் வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த வி.எஸ்.பழனிவேல் அறிமுகமானார். இரு தமிழ் திரைப்படங்களை தயாரித்துள்ள பழனிவேல், நன்மங்கலத்தில் ஒரு மருந்துக் கடையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் தன்னிடம் உள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிரவுண்ட் நிலத்தை விற்க இருப்பதாக பிரபுவிடம் பழனிவேல் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நம்பிய பிரபு, அந்த நிலத்தை வாங்க முன் வந்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கும் பின்னர் பிரபு, அந்த நிலத்தை ரூ.1.58 கோடிக்கு வாங்கினார்.
இதன் பின்னரே, அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்பதும், பழனிவேல் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தன்னிடம் விற்றிருப்பதும் பிரபுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து பிரபு, சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பழனிவேல் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.