சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய வரவாக 7 நெருப்புக் கோழிக் குஞ்சுகள், 5 ஓநாய்க் குட்டிகள் பிறந்துள்ளன.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், குரங்குகள் என பாலூட்டி இனங்கள் 455, பறவை இனங்கள் 1,433, பாம்பு, முதலை, பல்லி இனங்கள் 424 என மொத்தம் 2,302 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பூங்காவுக்கு தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மாதம்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பூங்காவுக்கு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீசாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து 8 ஜோடி வன விலங்குகள் அண்மையில் கொண்டு வரப்பட்டன.
புதிய வரவு: இந்தப் பூங்காவில் 11 நெருப்புக் கோழிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், ஒரு நெருப்புக் கோழி இட்ட முட்டைகளில் இருந்து 7 குஞ்சுகள் பொரித்துள்ளன. இதேபோல், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 7 ஓநாய்களில், ஒரு பெண் ஓநாய் 7 குட்டிகளை அண்மையில் ஈன்றது. இவை அனைத்தும் முறையான மருத்துவக் கண்காணிப்பைத் தொடர்ந்து, 3 மாதங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.