இருசக்கர வாகனத் திட்ட தொடக்க விழாவில், பேசிய பிரதமர் நரேந்திரமோடி, மகாகவி பாரதியாரின் பாடலைப் பாடி தனது பேச்சைத் தொடங்கினார்.
மகளிருக்கான திட்டத்தின் தொடக்கம் என்பதால், பெண்கள் குறித்த பாரதியாரின் பாடலை அவர் பாடினார். தமிழில் அவர் பேசியது:
அன்புமிக்க சகோதர சகோதரிகளே...வணக்கம். தமிழ் மண்ணிற்கும், மொழிக்கும் பாரம்பரியத்திற்கும் உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.
"எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்று சொன்ன மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதற்கு பெருமைப்படுகிறேன். பெண்ணே நீ மகத்தானவள் என்று தமிழில் பேசினார். அப்போது, பார்வையாளர்கள் தரப்பில் பெரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.
வாலாஜா சாலை: விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கடற்கரை சாலையில் உள்ள ஐ.என்.எஸ். விமானதளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திரமோடி வந்தடைந்தார்.
அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் கலைவாணர் அரங்கத்துக்கு வந்தார்.
அப்போது, பிரதமரை வரவேற்க, அரங்கம் அமைந்துள்ள வாலாஜா சாலை முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளான பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் ஆகியன நிகழ்த்தப்பட்டன. ஆங்காங்கே தவில்- நாதஸ்வரம் கருவிகள் வாசிக்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற பிரதமருக்கு, தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சந்தனத்தால் செய்யப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் சிலையை முதல்வர் பழனிசாமி அளித்தார். பொன்னாடை, மலரையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்தார்.
தேசிய கீதம் இல்லை: விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆனால், விழா முடிவில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. விழா முடிந்ததும், தேசிய கீதம் இல்லையா என்று பிரதமர் கேட்டார். அப்போது இல்லை என அரசு அதிகாரிகள் பதிலளித்தனர்.
இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பிரதமர் பங்கேற்கும் விழாக்களின் இறுதியில் வழக்கமாக தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையே சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவிலும் பின்பற்றப்பட்டது என்றனர்.