உரிமம் இன்றி விளம்பர பதாகைகள் வைக்கும் நபர்கள் மீது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட ஒரு விளம்பர பதாகைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மண்டலம் 1 முதல் 15 வரை (வார்டு எண். 1 முதல் 200 வரை) அனுமதியின்றி விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் மேற்கொள்ளும் தனி நபர்கள் மீது அல்லது தனியார் விளம்பர நிறுவனங்கள் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும். இதுபோன்று பதாகைகளை விளம்பரப்படுத்தியது தெரியவந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
இதில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட ஒரு விளம்பர பலகைக்கு ரூ.10 ஆயிரம் தண்ட தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டட உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான கட்டடத்தில் விளம்பர பலகைகள் அமைத்து விளம்பரம் மேற்கொள்ள அனுமதிக்கும் பட்சத்தில் அவ்விளம்பர நிறுவனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பர பலகை அமைக்க கட்டடத்தின் உரிமையாளர் அனுமதிக்கும் பட்சத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் கட்டிடத்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். என எச்சரிக்கப்பட்டுள்ளது.