சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
சென்னை நகரின் புகழைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை வாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நட்சத்திர விளையாட்டு, நாலுகட்ட தாயம், டயர் ஓட்டுவது உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.
ஆகஸ்ட் 13 வரை...: அரும்பாக்கம், அசோக் நகர், திருமங்கலம், கீழ்ப்பாக்கம், விமான நிலையம், பரங்கிமலை, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணா நகர் கிழக்கு, பச்சையப்பா கல்லூரி, சென்ட்ரல் ரயில் நிலையம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், அண்ணா நகர் டவர், ஏஜி-டிஎம்எஸ், ஷெனாய் நகர், நேரு பூங்கா, சிஎம்பிடி, தேனாம்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, மீனம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், வடபழனி, சின்னமலை, நங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் காலை 10 முதல் 12 மணி வரையிலும் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 16) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை இந்த பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
பயணிகளிடம் வரவேற்பு: கடந்த இரண்டு நாள்களாக இந்த விளையாட்டுகளை முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விளையாடிச் செல்கின்றனர். மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த முயற்சி பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.