சென்னை கோட்டூர்புரத்தில் அடையாற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர்புரம் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் ரம்யா (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரம்யா, வெள்ளிக்கிழமை இரவு கோட்டூர்புரம் அடையாற்று பாலத்தில் நடந்து வந்தார்.
அப்போது அவர் திடீரென பாலத்தில் இருந்து அடையாறுக்குள் குதித்தார். இதைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், தீயணைப்பு படையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகு நேரமானதால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
சனிக்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. சிறிது நேர தேடுதலுக்கு பின்னர், ரம்யா சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னையின் காரணமாக ரம்யா தற்கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது.