சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பயணிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக பங்கேற்றனர். தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், கிரீடா என்னும் நிறுவனமும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் இணைந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் 2 மணி நேரம் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தி வருகின்றன.
ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விளையாட்டுகள், ஜூலை 16-இல் நந்தனம் ரயில் நிலையத்திலும், ஜூலை 17-இல் கிண்டி ரயில் நிலையத்திலும், ஜூலை 18-இல் அரும்பாக்கம் ரயில் நிலையத்திலும், ஜூலை 19-இல் அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும், ஜூலை 20-இல் திருமங்கலம் மெட்ரோ ரயில்நிலையத்திலும், ஜூலை 22- இல் கீழ்ப்பாகம் மெட்ரோ ரயில் நிலையத்திலும் நடைபெற்றன. இதைதொடர்ந்து, விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நாலு கட்ட தாயம், பரமபதம் உள்பட பல்வேறு விளையாட்டுகள் இதில் இடம்பெற்று இருந்தன. இந்த விளையாட்டில் மெட்ரோ ரயில் பயணிகள், மாணவர்கள் என்று 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த விளையாட்டு விழாவில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.