புற்றுநோய் வராமல் தடுக்கவும், அதனைக் குணப்படுத்தவும் முடியும் என்று நடிகை கெளதமி கூறினார்.
சென்னை அடையாறு மருத்துவமனையில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நோயில் இருந்து மீண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகை கெளதமி பேசியது: எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததை நானே தான் கண்டுபிடித்தேன். புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. அதனைத் தடுக்கவும் முடியும். இந்தத் தகவலை 15 ஆண்டுகளாக பல இடங்களில் தெரிவித்து வருகிறேன். புற்றுநோயில் இருந்து ஏராளமானோர் மீண்டு வந்துள்ளனர். புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்றார் அவர்.
மருத்துவமனையின் கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வலட்சுமி பேசியது:
புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. எந்தக் காரணமும் இல்லாமலும் புற்றுநோய் பாதிக்க வாய்ப்புள்ளது. புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே பாடுபட்டு வருகிறோம். புற்றுநோயை வென்றவர்கள் கண்டிப்பாக வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழலாம் என்றார்.
நோயில் இருந்து மீண்டவர்கள் சிலர் பேசுகையில், "சினிமா, தொலைக்காட்சித் தொடர்களில் புற்றுநோயை ஒரு கொடிய நோயாகச் சித்திரிக்கின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவதாகக் காட்டுகின்றனர். இதனால், புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் தவறான புரிதல் ஏற்படுகிறது. இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். அதனை வென்று இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு நாங்களே சாட்சியாக இருக்கிறோம்' என்று தெரிவித்தனர்.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா, துணைத் தலைவர் டாக்டர் ஹேமந்த்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.