சென்னையில் புதிய பூங்காக்கள், கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் அவர் அவற்றை திறந்தார்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நுங்கம்பாக்கம் பள்ளிசாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் கட்டப்பட்ட சமுதாய நலக் கூடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், ஆலந்தூர் வி.ஜி.என். லட்சுமி நகர் கலைமகள் தெருவில் புதிய பூங்கா, ஆலந்தூர் அப்பாவு தெருவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிய பூங்கா, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதிய வண்ணாரப்பேட்டை, புஜ்ஜம்மாள் தெருவில் உள்ள சலவைக் கூடத்தில் ஓய்வறைகள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்தார்.
கருணை அடிப்படை: மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 198 பணியாளர்களின் வாரிசுகள், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் பணியாற்றிய 214 பேரின் வாரிசுகள் உள்பட 473 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.