சென்னை, வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இளைஞர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை, சேத்துப்பட்டு பூபதி நகரைச் சேர்ந்தவர் சிவராஜ் (38). இவர் மீது சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், சூளைமேடு ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒரு வழக்குத் தொடர்பாக சிறையில் இருந்த சிவராஜ் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து வெளியே வந்தார்.
இதையடுத்து சிவராஜ், செம்மஞ்சேரியில் வசிக்கும் தனது குடும்பத்தை பார்க்கச் சென்றார். அங்கு அன்று மாலை வந்த பழவந்தாங்கல் போலீஸார், ஒரு அடிதடி வழக்குத் தொடர்பாக சிவராஜை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் சிவராஜ் அதற்கு உடன்பட மறுத்ததால், போலீஸார் அங்கிருந்து சென்றுவிட்டனராம்.
இந்நிலையில், புதன்கிழமை காலை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சிவராஜ் வந்தார். அப்போது அவர், திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்குள் அங்கிருந்த போலீஸார், அவரது முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். அப்போது சிவராஜ், தன்னை போலீஸார் திருந்தி வாழவிடாமல் தடுப்பதாகவும், நெருக்கடி தருவதாகவும் கூறினார். இதையடுத்து, வேப்பேரி போலீஸார் சிவராஜை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இந்த சம்பவத்தால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.