பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட வடபழனியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.
வடபழனி பேருந்து நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அங்கு சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மண்டல உதவி ஆணையர் நடராஜன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கடைகள் அகற்றப்படுவதற்கு அதன் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.