பருவமழை காலங்களில் மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-அடையாறு, கூவம் ஆறுகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான காலதாமதத்தை கண்டித்து தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பருவ மழைக் காலங்களில் தயார் நிலையில் உள்ளதாக பொய்யான தோற்றத்தை இந்த அரசு வெளிப்படுத்துவதை கைவிட வேண்டும். மக்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பதற்கான முழு முயற்சியை எடுக்கவேண்டும்.
தமிழகத்தை நெருங்கி வரும் கஜா புயலைத் தொடர்ந்து ஏழு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், முழு மூச்சாக புயல் பாதிப்பிலிருந்து மக்கள் நலனை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.