சிக்னல் கோளாறு காரணமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும், விமான நிலையத்தில் இருந்து ஏ.ஜி.டி.எம்.எஸ். வரையிலும் இரு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவ்வப்போது மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படுவது வாடிக்கையான நிகழ்வாக மாறி வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் திடீரென நிறுத்தப்பட்டது.
இதேபோல, சிக்னல் கோளாறு வேறு சில மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஏற்பட்டதால், ஆங்காங்கு மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் மெட்ரோ ரயிலுக்காக காத்து நின்ற பயணிகளும், மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளும் அவதியடைந்தனர்.
இருப்பினும் மெட்ரோ ஊழியர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின்னர், சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு பின்னர் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக மெட்ரோ ரயில் சேவையில், கோளாறு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.