அபிராமபுரம் அருகே நடந்து சென்ற ஆயுதப்படை காவலரிடம் செல்லிடப்பேசி பறித்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, புதுப்பேட்டையில் வசிப்பவர் மணிமாறன், இவர், ஆயுதப்படை காவலர். இவர் கடந்த 2-ஆம் தேதி காலையில் பணிக்கு செல்வதற்காக அபிராமபுரம் பகுதியில் வி. கே. அய்யர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அபிராமபுரம் போலீஸில் மணிமாறன் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும், இருசக்கர வாகனப் பதிவு எண்ணை வைத்தும் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
பிடிபட்ட அடையாறு சரவணன் (20), பெரம்பூர் மேகசூர்யா(20), ஓட்டேரி வெங்கடேசன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வெங்கடேசன் செல்லிடப்பேசி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேருக்கும் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவி செய்ததும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து 2 செல்லிடப்பேசிகள், இரு மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர். சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மீதமுள்ள மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.