சென்னை வண்டலூரைஅடுத்த கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணினி, ரோபோட்டிக் தொழில்நுட்பப் பயிற்சி இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேலக்கோட்டையூர் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்புக் கல்வி மற்றும் உற்பத்தி நிறுவனம், கேப் ஜெமினி கார்ப்பரேஷனுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 அரசு உயர்நிலைப் பள்ளிகளைத் தத்தெடுத்து, அடிப்படை கணினி, 3 டி பிரிண்டர்கள், ரோபோட்டிக் தொழில்நுட்ப அறிவாற்றலைக் கற்றுத் தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து மேலக்கோட்டையூர் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்புக் கல்வி மற்றும் உற்பத்தி நிறுவன முதல்வர் எஸ்.ராஜசேகர பாண்டியன் கூறியது:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றல் கற்றுத் தரும் நோக்குடன் திருப்போரூர், கேளம்பாக்கம், மாம்பாக்கம், நெல்லிக்குப்பம், மறைமலை நகர், நந்திவரம் கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள 8 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நவீன பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு , ரூ 80 லட்சம் மதிப்புள்ள பயிற்சி இயந்திரங்கள், உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும் 5-ஆவது வகுப்பு முதல் 9-ஆவது வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள 50 மாணவர்களைத் தேர்வு செய்து, வாரம் இரு நாள்கள் பயிற்சியாளர்கள் மூலம் கணிதம், இயற்பியல், விஞ்ஞானம், கணினி அறிவியல் ஆகியவை குறித்து கற்றுக் கொடுக்கப்படுகிறது. கற்ற தொழில்நுட்பத்தை செய்முறை பயிற்சி மூலம் தாங்களாகவே செய்து கற்றுக் கொள்ளும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை டி.அனுராதா, பயிற்சி ஆசிரியை எஸ்.ஆனந்தி, பயிற்சியாளர் தினகரன், ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழக மாணவர்கள் உடனிருந்தனர்.