ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முன்பு அலுவலர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
திருத்தணி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். வட்ட கிளை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், 60 பெண் ஊழியர்கள் உள்பட, 75 பேர் பங்கேற்று, வரையறுக்கப்பட்ட ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், வரும், மே 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும்வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.