திருவள்ளூர் அருகே 6 மாதங்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, கிராம பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்டது எறையாமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் கேட்டபோது, குடிநீர் மேல்நிலை தொட்டியின் மின் மோட்டார் பழுதானதாகக் கூறினர். கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கடம்பத்தூர் போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜும்
பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இன்னும் ஓரிரு நாளில் மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.