திருவள்ளூர் அருகே ரெப்கோ வங்கியின் துணை நிறுவனத்தில் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். சுவரை துளையிட முடியாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.
திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆயில்மில் அருகே ரெப்கோ வங்கி உள்ளது. இதன் பின்புறம் மகளிர் சுய உதவிக்குழுவுக்கான 'ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ்' இயங்கி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் வங்கியின் பின்பக்கம் வழியாக ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பணம் ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், வங்கியின் பின்புற சுவரை உடைக்க முயன்றனர். அந்த சுவர் கான்கிரீட்டால் கட்டப்பட்டதால், சுவரை உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை, வங்கியை திறக்க வழக்கம் போல் வந்த அதிகாரிகள், பின்புறம் உள்ள ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டி.எஸ்.பி. புகழேந்தி, காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் வந்து பார்வையிட்டனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.