கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 17 பேர் காயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இவர்கள் பெரியபுலியூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தினமும் டிராக்டரில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல டிராக்டரில் வேலைக்கு சென்றனர்.
தண்டலச்சேரி-குருத்தானமேடு இடையே சென்றபோது, திடீரென டிராக்டரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி, டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வெங்கடேசன் (19), லவுங்கி (20), சதீஷ் (20), லவங்கி மண்டல் (24), சாதிக் மண்டல் (22), பாதர் மண்டல் (35) உள்பட 17 தொழிலாளர்களும் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.