படகில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பழவேற்காட்டில் இருந்து படகு மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை திருவள்ளூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல்
செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியான பழவேற்காட்டில் இருந்து படகு மூலம் ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திங்கள்கிழமை இரவு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பழவேற்காடு வந்தனர். அங்கிருந்து சாத்தாங்குப்பம் பகுதியில் ஏரிக்கரையோரம் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் அங்கு வந்த படகில் ரேஷன் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த போலீஸார் வெளியே வந்தனர். போலீஸாரை கண்டதும் அவர்கள் படகு மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர். அவர்களில் ஒருவரான சாத்தாங்குப்பத்தை சேர்ந்த பால்ராஜை (60) போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.