செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் வெல்டிங் பட்டறையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் ரங்கா கார்டனைச் சேர்ந்தவர் ராஜேஷ் (41). இவர், எல்லையம்மன் பேட்டையில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். தொழில் மந்தமாக இருந்ததால், ராஜேஷ் கடையை பூட்டிவிட்டு சில மாதங்களாக வெளி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கடையில் இருந்த வெல்டிங், கட்டிங், டிரில்லிங் உள்ளிட்ட இயந்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து ராஜேஷ் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார்
அளித்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், செங்குன்றம் சோத்துப்பாக்கம் மனிஷ் நகரைச் சேர்ந்த பாபு (28), பாடியநல்லூர் எம்.ஏ.நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜீ (29) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், ராஜேஷ் கடையில் இருந்த பொருள்களை இருவரும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெல்டிங் இயந்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து பாபு மற்றும் ராஜீ ஆகிய இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.