மாதவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 92 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மாதவரம் கே.கே.ஆர். கார்டன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல்சுரேஷ் (64). ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. இவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் 2 பீரோக்களை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 92 பவுன் தங்க நகைகள், ஒரு வைர மோதிரம், வைர கம்மல் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் இமானுவேல்சுரேஷ் புகார் அளித்தார். மாதவரம் உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணியன், ஆய்வாளர்கள் சங்கர், ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் பதிவைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.