திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் 2-ஆவது நாளாக 12 பவுன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் காவல் எல்லைக்கு உள்பட்டது முருகஞ்சேரி கிராமம். இங்கு சூரியகுமார் என்பவரது வீட்டில், கடந்த புதன்கிழமை இரவு, பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்களின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட, புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் தங்களது கை வரிசையை காட்டியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு பரந்தாமனின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த, பரந்தாமனின் மனைவி கற்பகம் (45), மகள் இந்துமதி (25) ஆகியோர் அணிந்திருந்த 12 பவுன் தாலிச் சரடினை ஒரே நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து பரந்தாமன் அளித்த புகாரின்பேரில் மப்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதியில் வீடுகளின் கதவை உடைத்து, மர்ம நபர்கள் நகைகளை பறித்து வருவதால், பெண்கள் அச்சத்துடன் உள்ளனர்.