அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகப் பொருள்கள் தீக்கிரையாகின.
அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்குப் பகுதியில் ஆவின் பால் பண்ணை அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதனை கணேசன்(42) நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தில் திங்கள்கிழமை இரவு சுமார் 10 தொழிலாளர்கள் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அலுவலக அறையிலிருந்து புகை வருவதை தொழிலாளர்கள் கவனித்தனர். அப்போது, அலுவலக அறையில் தீப்பற்றி எரிவது தெரிந்தது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களும், வில்லிவாக்கத்திலிருந்து ஒரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்துக்கு வந்தன.
தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் அணைக்கப்பட்டது. இத் தீ விபத்தில் அலுவலகத்திலிருந்த மேஜை, நாற்காலி, கணினி, குளிர்சாதனப்பெட்டி போன்றவை எரிந்து சாம்பலாயின.
இந்த தீ விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் நடத்திய விசாரணையில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.