திருத்தணி அருகே வயல்வெளியில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இக்கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமி விலாசபுரம் (எல்.வி. புரம்) அருகே வயல்வெளியில் அதிக அளவில் கோரைப் புல் வளர்ந்துள்ளது. அப்பகுதியில், செவ்வாய்க்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், சுமார் 35 வயது மதிக்கத் தக்க பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் திருவாலங்காடு போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அங்கு, பெண்ணின் உடல் கை, கால் கட்டப்பட்ட நிலையில், தலை
துண்டிக்கப்பட்டும் கிடந்தது. இறந்த பெண் பற்றிய விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.