அம்பத்தூரை அடுத்துள்ள அயப்பாக்கத்தில் பூங்கா அருகில் தினமும் குப்பைகள் மலை போல் குவிகின்றன. இதனால், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அயப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பைகள் சேருகின்றன. இப்பகுதியில், குப்பைகளை சேகரிக்க இடமில்லாமல் சாலை முழுவதும் குப்பைகள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன.
இங்கு, வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்ட பெரிய பூங்கா உள்ளது. இப்பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து இளைப்பாறுதல், நடைப்பயிற்சி மேற்கொள்ளல்,
சிறுவர்-சிறுமிகள் விளையாடல், பள்ளி மாணவர்கள் சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகள் பெறுதல் என தினமும் பூங்கா களைகட்டியிருக்கும்.
ஆனால், சமீப காலமாக பூங்காவின் அருகில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். இதனால் பூங்காவில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்னையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, குப்பைகளைக் கொட்ட தனி இட வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், தொற்று நோய்களில் இருந்து மக்களைக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.