ஆர்.கே.பேட்டையை அடுத்த வெள்ளாத்தூர் அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
இக்கோயிலில் நித்ய தீபாராதனை பூஜைகள் மாதம்தோறும் நடைபெறுகிறது. இதையொட்டி, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, அபிஷேகம் செய்ய பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
மாலை கோயில் வளாகத்தில் திரளாகக் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அப்போது பம்பை உடுக்கையுடன் கூடிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் அம்மன் பாடல்களைப் பாடி வழிபட்டனர்.
ஊஞ்சல் சேவையில் பங்கேற்ற பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், மஞ்சள், குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினர் செய்திருந்தனர்.