அம்மாபள்ளி அணையில் உபரி நீர் வெளியேற்றம்: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநிலம், அம்மாபள்ளி அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம், அம்மாபள்ளி அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடையில் நிலவிய கடுமையான வெப்பம், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு நீரில்லாத நிலையில் காணப்பட்டது. இதனால், சென்னை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கன மழை பெய்து வருவதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 
அதேபோல், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபள்ளி அணை அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நிரம்பியது.
இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீர் இரண்டு மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆறு வழியாக விரைவில் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், தற்போது 92 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 177 கன அடியாக உள்ளது.
150 மில்லியன் கன அடி கொள்ளளவை எட்டினால் மட்டுமே, இணைப்புக் கால்வாயில் நீர் திறந்து விட முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com