சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்து, திருத்தணியில் வாகன ஓட்டிகளுக்கு புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் பெற புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களிடையே மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், பேசியதாவது: அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், 18 வயதுக்கு குறைவாக உள்ள இளைஞர்கள் வாகனங்கள் ஓட்ட முடியாது. அவர்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கிறது.
மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட விதிகளை மீறுபவர்களின் அசல் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படுவதால், 3 மாதங்களுக்கு அவர்களால் வாகனங்களை இயக்க முடியாது.
அதேபோல், உயிரிழப்பை ஏற்படுத்தும் ஓட்டுநர்களின் உரிமம் பறிமுதல் செய்யப்படுகிறது. அவர்களால், 6 மாதங்களுக்கு வாகனங்கள் ஓட்ட முடியாது. அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால், இதுபோன்று பல நன்மைகள் ஏற்படுவதுடன், விபத்துகளையும் தவிர்க்க முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் திருத்தணி டி.எஸ்.பி., பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.