திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை இயக்க திட்டத்தின் கீழ், மரக் கன்றுகள் நடப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 'தூய்மையே சேவை இயக்க' திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் ஞானசேகரன் மேற்பார்வையில் அரசு, அரசு உதவிபெறும், தொடக்கக்கல்வி, மெட்ரிக். பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப் போட்டிகள் மற்றும் தூய்மையே சேவை பற்றி விளக்கும் வகையில் பேரணிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தூய்மையே சேவை இயக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயசந்திரன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் நாகராஜ், ஆங்கில ஆசிரியர்கள் ராதைய்யா, சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய பசுமைப் படை மாணவிகளை கொண்டு, பள்ளி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர், தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சேஷாசலம், சுப்பிரமணியம், வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வர் ராவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.