மாமனாரை கொலை செய்த வழக்கில் மருமகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து, பொன்னேரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில் வசித்து வந்தவர் அப்பாதுரை (56). இவரது மகள் சசிகலாவுக்கும் (38), அதே கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கருக்கும் (40) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கருக்கும், சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சசிகலா கோபித்துக் கொண்டு, தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துவருவதற்காக கடந்த 18.6.2012 அன்று பாஸ்கர், தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது, அப்பாதுரைக்கும், பாஸ்கருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், பாஸ்கர், அப்பாதுரையை கீழே தள்ளி, அருகில் கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் போட்டாராம்.
இதில், நிகழ்விடத்திலேயே அப்பாதுரை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து, பாஸ்கரை கைது செய்தனர். இந்த வழக்கு பொன்னேரியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து பாஸ்கரை போலீஸார், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.