திருவள்ளூர் அருகே சேவாலயா சார்பில் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை முகாம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் சேவாலயா சார்பில் பாரதியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2,100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர்.
தனியார் நிறுவனம் சார்பில் இவர்களின் பயன்பாட்டுக்காக இப்பள்ளி வளாகத்தில் 12 சுகாதார வளாகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வாடாநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள மருத்துவ மையம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை முகாமை தனியார் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி டாங் சப் யூன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
ஓராண்டு முழுவதும் தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவை முகாமை நடத்த ஓராண்டு செலவுக்காக ரூ.22 லட்சத்துக்கான காசோலையையும் அவர் சேவாலயா நிறுவனத்துக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சேவாலயாவின் நிறுவனர் முரளிதரன், சேவாலயா அறங்காவலர் அன்னபூர்ணா மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.