வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் மரணத்துக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க நிர்வாகி சங்கர் தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், பாண்டியராஜன், அருள்டேனியல், சத்தியநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றிய மணிமாலா கடந்த சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நியாயம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில், தமிழ்நாடு அரசு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.