சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில், காயம் அடைந்த தொழிலாளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரி, சக தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை காலை, எரிவாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மகேந்திரன் மீது எரிவாயு உருளை விழுந்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி நிர்வாகத்திடம் சக தொழிலாளர்கள் கடிதம் கேட்டதாகவும், அதற்கு நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், நிர்வாகத்தினர் கடிதம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக 4 மணி நேரம் எரிவாயு நிரப்பும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.