கும்மிடிப்பூண்டி அருகே, தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதைக் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டத்தைச் செயல்படுத்தக் கோரியும் பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளாக, பெத்திக்குப்பம் மேம்பாலத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவு வரை தெருவிளக்குகள் எரியவில்லை என கூறப்படுகிறது. இதனால், மேம்பாலப் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக பெத்திக்குப்பம் பகுதி மக்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் இணைந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கடந்த ஓராண்டாக இப்பகுதி மக்களுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பும் தரப்படவில்லையாம்.
இந்நிலையில், இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் லோகநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் உமாதேவி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், பெத்திக்குப்பம் மேம்பாலச் சாலையில் மின் விளக்குகள் எரியவும், வரும் வெள்ளிக்கிழமை முதல் நூறு நாள் வேலை திட்டம் தொடரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.