திருவள்ளூர் அருகே தலக்காஞ்சேரியில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தலக்காஞ்சேரியில் உள்ள ஏபிஎஸ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இவ்விழாவுக்கு பள்ளியின் செயலாளர் ரமேஷ்சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் ரதிமேனன் வரவேற்றார். இப்பள்ளியின் பொருளாளர் பிரேமா சுப்பிரமணியம், அறக்கட்டளை உறுப்பினர்கள் பாபு, தொல்காப்பியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி பள்ளி வளாகத்தில் கரும்பு மற்றும் மஞ்சள் கிழங்கு வைத்து பச்சரிசி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்கும் வகையில் வண்ணக் கோலமிடுதல், ஓவியம், சமையல் கலை, மங்கள ஆரத்தி தட்டு அலங்காரப் போட்டி, குழு நடனம், பட்டிமன்றம், உடனடி சொற்பொழிவு மற்றும் சைகை பேச்சு போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் முதல்வர் ரத்னாபாய் நன்றி கூறினார்.