திருவள்ளூர் அருகே காக்களூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்எல்ஏவும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான ஏழுமலை தலைமை வகித்துப் பேசியதாவது: வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கிராமங்கள் தோறும் உள்ள ஆதரவாளர்களைக் கண்டறிந்து உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். இதில் தீவிரமாகச் செயல்படுவோருக்கு கட்சியில் நிர்வாகப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றார்.
இதில் நிர்வாகிகள் செல்வக்குமாரி அண்ணாதுரை, ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டியில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார். மகளிர் அணி மாவட்டச் செயலாளர் செல்லகுமாரி, அவைத் தலைவர்கள் ஜானகிராமன், நடராஜன், மாணவர் அணி நிர்வாகிகள் இ.எஸ்.ராமச்சந்திரன், ஆனந்தராஜ், நடராஜன், ஏசுமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஜி.கே.வாசு வரவேற்றார்.
இக்கூட்டத்தில், பூந்தமல்லி எம்எல்ஏ டி.இ.ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ பொன்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற முனைப்போடு செயல்படவேண்டும், ஜனவரி-17 இல் எம்ஜிஆர் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் செந்தில், பாபு, ராஜேஷ் தட்சிணாமூர்த்தி, வேலுமணி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.