வாகனத் திருட்டு: 2 பேர் கைது
திருத்தணி அருகே, இருசக்கர வாகனங்களைத் திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 6 மாதத்தில் 207 இரு சக்கர வாகனங்கள் திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசந்திரன், உதவி ஆய்வாளர் சுரேந்தர் உள்ளிட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர்கள் வாகனத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், செஞ்சிபனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் சூர்யா(18), அரக்கோணம் நாகாலம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (22) என்பதும் தெரியவந்தது. 5 இரு சக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மூன்று வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய ஜான் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.