மனைவி கண்டித்ததால், ஆத்திரமடைந்து பாழடைந்த கிணற்றில் குதித்து உயிருக்குப் போராடிய இளைஞரை, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் இருளர் காலனியைச் சேர்ந்த ஏழுமலை (26). கூலித் தொழிலாளி. அவரது மனைவி தேன்மொழி. கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை ஏழுமலை தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறப்படுகின்றது. இதனால், கணவன்-மனைவி இடையில் அடிக்கடி தகராறு நடைபெறும்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குடித்து விட்டு வந்த கணவரை தேன்மொழி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை ஆத்திரத்தில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள 40 அடி ஆழம்கொண்ட பாழடைந்த கிணற்றில் குதித்தார்.
அக்கிணற்றில் உயிருக்குப் போராடினார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் குதித்த வாலிபரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.