திருவாலங்காடு அருகே கனகம்மா சத்திரத்தில் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த சில மாதங்களாக பகல் நேரத்தில் அனல்காற்றுடன் வெயில் கொளுத்தியது. வெயில் தாக்கம் அதிகரித்ததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் வரை வெயில் கொளுத்தியது.
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை கனகம்மாசத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அங்குள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியது.
இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் சில நாள்கள் இது போல் மழை பெய்தால் நடப்பாண்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.