மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட வீரர் - வீராங்கனைகள் 7-ஆவது முறையாக சாம்பியன் பதக்கத்தை வென்றனர்.
தமிழக அளவிலான சிலம்பப் போட்டி கடந்த நவம்பர் 9 முதல் 11 வரை 3 நாள்கள் விருதுநகரில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில், 11 முதல் 15 வரை வயது பிரிவினரும், 17 முதல் 20 வயது மற்றொரு பிரிவினர் என 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பக் கழக வீரர் - வீராங்கனைகள் 7 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 14 பதக்கங்களைப் பெற்று தொடர்ந்து 7-ஆவது முறையாக சாம்பியன் பதக்கத்தை வென்றனர். தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக தலைவர் மு.ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆகியோர் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினர்.
இதில், திருவள்ளூர் மாவட்ட சிலம்பக் கழக தலைவர் கமாண்டோ பாஸ்கரன், செயலாளர் முருககனி, பொருளாளர் ராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளிகிருஷ்ணா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.