மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 2,082 பயனாளிகளுக்கு ரூ.17.69 கோடி மதிப்பில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெண்மனம்புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.
இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் பேசியது: பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பொதுமக்களின் இருப்பிடத்திற்குத் தேடிச்சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையிலும், குறைகள் தொடர்பான மனுக்களைப் பெறும் வகையிலும் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 43 ஊராட்சிகளைச் சேர்ந்த 1,929 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல், 20 பேருக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்குத் தங்கம், முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 52 பேருக்கும், மின்னணு புதிய குடும்ப அட்டை 53 பேருக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 19 பேருக்கும், நலிந்தோர் உதவித்தொகை 9 பேருக்கும் என மொத்தம் மொத்தம் 2,082 பேருக்கு ரூ.17.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியது: இந்த முகாமில், 31 வகையானஅரசுத் துறைகள் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 28 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளோர் ஏதாவது ஒரு திட்டத்தில் பயன்பெறுவதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் எவ்வாறு பயன் பெறலாம் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் இங்கு கண்காட்சி வைத்துள்ளனர். இதைப் பார்த்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் பி.வேணுகோபால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறுணியம் பி.பலராமன் (பொன்னேரி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), முன்னாள் அமைச்சர்
பி.வி.ரமணா, சார் ஆட்சியர் டி.ரத்னா, மருத்துவத் துறை இணை இயக்குநர் தயாளன், கால்நடைத்துறை இணை இயக்குநர் குபேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சந்தானம், முன்னாள் நகராட்சித் தலைவர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.