கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 10 ஏக்கர் பரப்பில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மதன் குப்புராஜ் தலைமையில், வட்ட சார் ஆய்வாளர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், வட்ட துணை ஆய்வாளர் யோகநாத், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் நவீன், ஜெயசந்திரன் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேலிகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றி ஆக்கிரமிப்புகளை மீட்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கண்ட 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், மாநெல்லூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.