வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பவனந்தி செவ்வாய்க்கிழமை விநியோகித்தார்.
திருத்தணி புறவழிச் சாலையில் மோட்டார் வாகன போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதா பானு தலைமை வகித்தார். திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். திருத்தணி காவல் ஆய்வாளர் விநாயகம் வரவேற்றார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் பவனந்தி, திருத்தணி வட்டாட்சியர் செங்கல்லால், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைக்கவசம் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் ராதாகிருஷ்ணன் லியோ குமார் பரணிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சலுகை விலையில் ஹெல்மெட் விற்பனை செய்யப்பட்டது.