திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி, விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மொன்னவேடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மகளிர் குழு தலைவி உமாராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மொன்னவேடு கிராமப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், மொன்னவேடு, எறையூர், பேட்டை ஆகிய பகுதிகளில், பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்படும் முன்பே மது பாட்டில்களை வீட்டில் வைத்து, அதிகாலை முதல் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆண்கள் நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்றால் மட்டுமே வருவாய் என்கிற நிலை உள்ளது. ஆனால், 24 மணி நேரமும் மது கிடைப்பதால் அவர்கள் வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தைத் தவிக்க விடுகின்றனர். மேலும் மது அருந்துவோர் பள்ளி அருகிலேயே பேருந்து நிறுத்தத்தில் படுத்துவிடுகின்றனர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகிகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.