திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பயிற்சி முடித்த 150 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட அரசு இசைப் பள்ளியின் 18-ஆவது ஆண்டு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தி.ஆ.பா.ரவிசங்கர் தலைமை வகித்தார். குரலிசை ஆசிரியர் இரா.காசி விஸ்வநாதன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் கலை, பண்பாட்டு மையத்தின் மண்டல உதவி இயக்குநர் சு.குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பல்வேறு பயிற்சிகளை நிறைவு செய்த 150 மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். இதைத் தொடர்ந்து, இசைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், தேவார ஆசிரியர் மு.திருநாவுக்கரசு, தவில் ஆசிரியர் சி.பாஸ்கர், வயலின் ஆசிரியர் ர.ஷேக் தாவூத், பரத நாட்டிய ஆசிரியர் வெ.பிரியா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செ.மதிவாணன், திருப்புகழ் பரப்புநர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.