குடிநீர்த் தட்டுப்பாடு: 2 கிராம மக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம் அருகே குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம் ஒன்றியம், குப்பனத்தம் கிராமத்தில் குடிநீர் கிணறுகளில் போதிய தண்ணீர் இருந்தும் அந்தப் பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இந்நிலையில், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அந்தக் கிராமத்தில் உள்ள கிளையூர் - செங்கம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலீஸார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 நாள்களில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிளையூர் - செங்கம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியகாயம்பட்டு: இதேபோல, செங்கத்தை அடுத்த பெரியகாயம்பட்டு கிராமத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராமத்திலுள்ள செங்கம் - பெங்களூரு சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் செங்கம் - பெங்களூரு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com