ஆரணி புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள முட்டைக் கடையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, அந்தக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரணி இராட்டிணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன். நெசவுத் தொழிலாளி. இவர், ஆரணி சந்தை வீதியில் உள்ள ஒரு கடையில் 20 முட்டைகளை ரூ.50 கொடுத்து வீட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளார்.
பின்னர், அந்த முட்டைகளை தண்ணீரில் போட்டபோது, அவை மிதந்தனவாம். இதனால் சந்தேகமடைந்த ஜானகிராமன், தண்ணீரில் முட்டைகளை வேகவைத்து உரித்துப் பார்த்தார். அப்போது, உட்கரு பிளாஸ்டிக் போல இருந்ததாம். இதுகுறித்து உடனடியாக அவர் ஆரணி வட்டாட்சியர் சுப்பிரமணியிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆரணி சந்தை வீதியில் உள்ள முட்டைக் கடைக்குச் சென்ற வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் ஆகியோர் கடையில் இருந்த முட்டைகளை தண்ணீரில் போட்டு பிளாஸ்டிக் முட்டையா? என்று சோதனை செய்தனர். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் அவர்கள் தகவல் அளித்தனர்.
அதன்பேரில், ஆரணி உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாபு, முட்டைக் கடைக்குச் சென்று அங்கிருந்த முட்டைகளை சோதனை செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிளாஸ்டிக் முட்டைக்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை. எனினும், புகாரின் அடிப்படையில் முட்டைக் கடையில் இருந்து மாதிரிக்காக எடுக்கப்பட்ட முட்டைகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.